ஒரு கலைஞனுக்கும் ரசிகனுக்குமுள்ள உறவு வரைமுறைக்கு அப்பாற்பட்டது. நான் விரும்பும் கலை உன்னிடம் உள்ளது , அதனால் உன்னை விரும்புகிறேன் என்ற நிலையிலுள்ள ரசிகன் அநேகமான நேரங்களில் உண்மையுள்ளவனாகவே இருக்கிறான். அந்த உண்மை விசுவாசமாக மாறி கலையை விட கலைஞனை நேசிக்க ஆரம்பிக்கும் போது அவன் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரலாம்.
கலைஞனுக்கூடாக கலை ஊற்றெடுத்து உலகை சென்றடைந்தாலும் கலையை களைந்து பார்த்தால் அவனும் மனிதனே. ஆயினும் கலைஞனை கடவுளாகப் பார்க்கும் கூட்டமும் அவனிலுள்ள மனிதனை மறந்துவிட்ட கூட்டமும் நிறைய நேரங்களில் கலைக்கு உண்மையாய் இருப்பதில்லை.
கலைஞனை கடவுளாகப் பார்க்கும் கூட்டம் அவன் என்ன செய்தாலும் அது கலை என்று கண்மூடி ஏற்றுகொள்கிறது. கலைஞனில் உள்ள மனிதனை மறக்கும் கூட்டம் அந்த மனிதன் விடும் தவறுகளுக்காக அவனின் கலையை தண்டித்து விடுகிறது.
உலகிற்கு எப்போதும் தேவை நல்ல கலைகளும் கலையை மட்டும் நேசிக்கும் ரசிகர்களுமே....