Thursday 27 October 2011

நான் நானாக.........

(மித்திரன் வாரமலரில் நான் எழுதிய "ரசிக்கலாம் வாங்க" தொடரிற்காக எழுதியது... 29-05-2005 இல் பிரசுரமானது) 

ஒரு நண்பர் இருந்தார்... அவரிடம் எனக்கு மிகப்பிடித்த விடயம் அவர் உலகை பற்றிக் கவலைப்படாதது தான். அதாவது மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் ஒரு துளியேனும் அவரிடம் இருந்ததில்லை. தனக்கு பிடித்த விதத்தில் ஆடைகள் அணிவார். பல சமயங்களில் அது வித்தியாசமான கோணத்தில் இருக்கும். அவரைக் கடந்து போகின்றவர்கள் நிச்சயமாக ஒருதடவை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு போவார்கள். விதவிதமாய் சிகை அலங்காரம் செய்வார். வகை வகையாய் ஆபரணங்கள் அணிவார். தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அத்தனையும் செய்வார். அதற்கான விளக்கங்கள் நமக்கு புரியாது. நமக்கு புரியவைக்க அவர் முயல்வதும் கிடையாது. நினைத்ததை எல்லாம் சென்சார் இன்றிப் பேசுவார். சபையோர் எவராக எத்தரப்பினராக இருப்பினும் அவரது பேச்சு இடத்துகேற்ப மாறுவதில்லை. .....       மொத்தத்தில் அவர் அவராகவே இருந்தார்!



இந்தக் கடைசி வரி தான் ரொம்ப முக்கியம். நிறைய சமயங்களில் நாம் நாமாக இருப்பதில்லை. மற்றவர்களை திருப்திப்படுத்த எம்மை அடிக்கடி மாற்றிக் கொள்கிறோம். போலி கெளரவம் கருதி எமது நடை உடை பாவனை அனைத்திலும் செயற்கை மாற்றங்களை கொண்டு வருகிறோம். அநேகமான சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கேள்விக்குப் பயந்து பதுங்கிக்கொள்கின்றோம்.

இப்படி கடைசிவரை மற்றவர்களிடத்திலுள்ள பயத்தினால் அனேக விடயங்களை அனுபவிக்காமலும் சாதிக்காமலும் செயற்கையாகவே வாழ்ந்து மடிந்துவிடுகின்றோம்.....இது தேவை தானா?

யார் இந்த மற்றவர்கள்? அவர்களின் கருத்துக்கு நாம் எதற்கு அஞ்ச வேண்டும்? என்றெல்லாம் நாம் எண்ணிப்பார்ப்பது கிடையாது. ஒவ்வொரு தனி மனிதனதும் ஆசைகளும் கருத்துகளும் வெவ்வேறானவை. எனக்கு சரியெனப் படுவது உங்களுக்கு பிழையாகப் படலாம். இதில் யார் சரி யார் பிழை என்ற தீர்ப்பை எவருமே வழங்க முடியாது. அது அவரவர் வகுத்துள்ள கொள்கைகளை பொறுத்தது.

அப்படியிருக்க இன்னொருவர் வகுத்த கொள்கைக்காக நாம் எதற்காக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்? அவருக்குப் பிடிக்காது என்பதற்காக நாம் எதற்காகக எம் கொள்கைகளை மாற்றிகொள்ள வேண்டும்? இவையெல்லாம் பெரும்பாலானோரின் மனதில் அடிக்கடி எழும் கேள்விகள் என்றாலும் கூட நான் நானாகவே இருப்பேன் என்று உறுதி பூணும் தைரியம் பலருக்கு இல்லை
.

இன்றைக்கு ஆங்கில எழுத்தாளர்கள் தாம் விரும்பியதையெல்லாம் எழுதும் சுதந்திரம் பெற்றிருக்கின்றார்க்ள். ஆபாசமோ அசிங்கமான வார்த்தைகளோ தேவைப்படின் அவற்றை பாவிப்பதற்கு அவர்கள் தயங்குவதில்லை. ஆனால் நம்முடைய சமூகத்தில் ஒரு படைப்பாளி உண்மை பேசிவிட முடியாது. பேசிவிட்டால் அவன் படைப்பு விலை போகாது சோறும் கிடைக்காது என்கிற நிலை. விமர்சனங்கள் கூட பெரும்பாலும் ஆரோக்கியமாக இல்லை. தமது சொந்தப் புலமையை வெளிக்காட்டவும் அல்லது இவன் அப்படி என்ன கிழித்து விட்டான் என்கிற மனநிலையிலுமே பெரும்பாலான விமர்சனங்கள் கொட்டப்பட்டுக் கொண்டிருகின்றன.

படைப்பாளி ஆகட்டும் தனிமனிதனாகட்டும்.. அடுத்தவர் தன்னைப்பற்றி என்ன விமர்சனம் செய்தலும் அதனால் நான் பாதிப்படையப் போவதில்லை என்ற மனநிலை வரும் போதே அவன் பூரண சுதந்திரமுள்ளவனாகி தன் வாழ்வை தனக்காக வாழ தொடங்குகின்றான். அடுத்தவர் சுதந்திரத்துக்கு பாதிப்பில்லாத வண்ணம் எடுக்கும் எந்த முடிவையும் நாம் தயக்கமின்றி எடுக்கலாம்.  மொத்தத்தில் நாம் நாமாக இருப்போம்....!!





No comments:

Post a Comment