24-01-2014 அன்று Metro News பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை
பாடல்கள் கேட்பது பலருக்குப் பொழுதுபோக்கு, என் போன்றவர்களுக்கு அது தொழிலின் ஒரு அங்கம் என்று கூறலாம். அப்படியிருக்கையில் நான் ரசித்த பாடல் என்று ஒரே ஒரு பாடலை நினைவுக்குக்கொண்டு வருதல் போன்ற கடினமான விடயம் வேறில்லை. இருப்பினும் கண்ணை மூடி சிந்தித்த ஒரு கணத்தில் மனதில் உடனே தோன்றிய மிகப்பிடித்த பாடல்வரிசையில் ஒன்று 'அடி ராக்கம்மா கையத்தட்டு...'
இளையராஜா அண்மையில் ஒரு விடயம் சொல்லியிருந்தார்... 'இசையில் பிரம்மாண்டம் என்பது நூறு இசைக்கலைஞர்கள் ஒன்றாக இசைத்தால் தான் வரவேண்டுமென்பதில்லை. ஒரே ஒரு பாடகன் கூட பாடலினுள் ஒரு பிரமாண்டத்தைக் கொண்டுவந்துவிடலாம்' அவர் கூறியதை அவரே பலமுறை நிரூபித்துமுள்ளார்.
சில விரல்கள் சொடுக்கும் ஒலி.. அதனோடு எஸ்.பி.பியின் குரல் 'அடி ராக்கம்மா கையத்தட்டு' என்று ஒலிக்கையில் எந்த இசைக்கருவியும் இல்லாமல் ஒரு பிரமாண்ட அனுபவம் ஏற்படுகிறது.
மேற்கத்திய Orchestral music இனுள்ளே தமிழ்வாசம் வீசும் மெட்டுகளையும் சங்கதிகளையும் வாத்தியப் பிரயோகங்களையும் இட்டு நிரப்பி மேற்கத்திய மற்றும் எங்கள் இசை வடிவங்களை ஒரு புள்ளியில் இணைக்கும் கலையின் முன்னோடி இளையராஜா இந்தப்பாடலிலும் தன் உலக இசையறிவை காட்டத் தவறவில்லை.
பாடலின் ஆரம்பம் string வாத்தியங்கள் மட்டும் வேகமாய் ஓடி ஒரு மேற்கத்திய orchestralஇசைவடிவத்தைக் கேட்கப்போகிறோம் என்கிற பிரமிப்பை உண்டாக்கும். சில செக்கன்களில் அதனோடு கலக்கும் தாள வாத்தியங்கள் மீண்டும் நம்மை நம் திரையிசை வடிவத்துக்குள் கொண்டுவரும்.
பல வாத்தியக்கருவிகள் ஒன்றாய் இசைத்துத்தந்த பிரமாண்டம் கெடாமல் முன்னர் சொன்னது போல் வெறும் விரல்சொடுக்கும் ஓசையுடன் குரல் மட்டும் ஒலிக்கும். குரலுக்கு சில வயலின்கள் பதிலளிக்க 'ஜகஜகஜா' என்று குரல்கள் சில தொடரும்.
ஆ... என்றோ ஓ... என்றோ லாலா என்றோ வழமையாக யோசித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்த 'ஜகஜகஜா' என்கிற யோசனை இவருக்கு எப்படி வந்திருக்கும் என்று நான் சிந்திப்பதுண்டு.
வயலின்களில் பிரயோகத்துக்கேற்ப இந்த ''ஜகஜகஜா' ஈடுகொடுத்துப்போகும். தொடர்ந்தும் விரல்கள் மற்றும் எஸ்.பி.பி, ஸ்வர்ணலதாவின் குரல்கள்.....கிடைக்கும் சின்னச்சின்ன இடைவெளிகளில் வயலின்களின் சிணுங்கல்கள்.. பின்பு 'ஜாங்குஜக்கு' என்று ஆரம்பிக்கும் குரல்கள். 'ஜா' என்னும் ஒலி வேறெந்தப் பாடலிலும் இந்தளவுக்கு கையாளப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.
தொடர்ந்து முதலாவது இடையிசையில் orchestralஇசைக்கோர்வை பின்னணியில் ஓட மேற்கத்திய இசைக்குள் நம்மை முழுதாய் இட்டுச்சென்று விடாது தமிழிசைக்குள்ளேயே இருக்க வைக்கும் ஒரு தந்திரமான இசையமைப்பு. சரணம் ஆரம்பிக்க வயலின்கள் மௌனிக்கின்றன. தாளவாத்தியங்களோடு தேவையான சில அடிப்படை இசைக்கருவிகளுடனும் குரல் பயணித்து 'மத்தளச்சத்தம்...' என்று ஆரம்பிக்கும் இடத்தில் பின்னணியில் மௌனித்த string வாத்தியங்கள் பேச ஆரம்பிக்கின்றன.
பாடலின் இடையில் 'குனித்த புருவமும்' என்று ஆரம்பிக்கும் தேவாரம் ஒரு சிறப்பம்சம். வேகமாய் வரும் ஒரு வாகனம் வேகத்தை லாவகமாகக் குறைத்து வளைவொன்றில் திரும்புவது போன்று பாடலின் வேகம் அல்லது டெம்போ லாவகமாய் குறைந்து தேவாரம் ஒலிக்க ஆரம்பிக்கும். 'ம்...' என்னும் ஹம்மிங்கோடு பாடல் வேறு தளத்துக்குள் நுழைந்து தேவாரம் ஒலித்தாலும் அதே ஹம்மிங்கின் பின்னணியில் பாடல் தொடர, பாடல் எந்த இடத்தில் டெம்போ குறைந்தது எந்த இடத்தில் கூடுகின்றது என்ற தடமே தெரியாமல் ஒரு மாயையைக்கொண்டு வருகிறது.
1 comment:
வாழ்த்துக்கள்
Post a Comment